இலங்கைசெய்திகள்

வவுணதீவு பிரதேசத்திலுள்ள வயல் பகுதியிலிருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!!

death

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாங்கேணிச்சேனை பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து முதியவர் ஒருவர் செவ்வாய்கிழமை மாலை (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவற்காடு மாவடித்தீவு பிரதேசத்;தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 76 வயதுடைய தம்பியப்பா சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் பொன்னாங்கேணிச்சேனை பிரதேசத்தில் வாடியமைத்து அங்கிருந்து தனது வயல் மற்றும் மாடுகளை நீண்டகாலமாக பராமரித்து வருவதாகவும் இடையிடையே தனது வதிவிடத்திற்கு சென்று வருவதாகவும் சம்பவ தினத்தன்று உறவினர் ஒருவர் குறித்த பிரதேசத்திற்கு சென்றவேளை தனது வாடிக்கு அருகில் உள்ள வயல் பிரதேசத்தில் மரணமடைந்த நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button