மருத்துவம்

தொடர் தும்மலால் அவதிப்படுகின்றீர்களா – கு.கணேசன்!!

Sneezing

மழை, பனி, குளிர், கோடை எனச் சுற்றுச்சூழல் மாறும்போதெல்லாம், சில நோய்கள் நமக்குத் தொல்லை கொடுப்பது உண்டு. அவற்றுள் தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், ஆஸ்துமா, இளைப்பு போன்றவை ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. இவற்றுள் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர எந்த ஓர் அந்நியப்பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. உடனடியாக அதை வெளியேற்ற முயல்கிறது. அந்த நடவடிக்கைதான், தும்மல்.

தும்மல் ஏற்படுவது எப்படி?

நம் நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால், அவற்றை வடிகட்டி அனுப்புவது இவற்றின் வேலை. இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாக தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்துவிட்டால், இந்தச் சவ்வுப்படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித்தள்ளும் முயற்சியில் சவ்வுப்படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், தொண்டை, வாய், நெஞ்சு, நுரையீரல் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூக்குப்பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் வெளியே தள்ளுகின்றன. இதுதான் தும்மல். இப்படித் தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.

ஒவ்வாமை தும்மல்

சாதாரண தும்மல் சில நிமிடங்களில் நின்றுவிடும். சிலர் தொடர்ச்சியாக நூறு முறைகூட தும்முவார்கள். ஒரு கைத்துண்டு நனைகிற அளவுக்கு மூக்கிலிருந்து நீர் கொட்டும்; மூக்கு அரிக்கும். மூக்கின் வழி சளி கொட்டும். இதற்கு ‘ஒவ்வாமைத் தும்மல்’ ( Allergic Rhinitis ) என்று பெயர். இன்றைய சூழலில் இதுதான் பலருக்கும் துன்பம் தரும் தும்மலாக இருக்கிறது. உலகில் 40 கோடி பேருக்கு இந்த இன்னல் இருக்கிறது. இந்தியாவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100ல் 30 பேருக்கும், 100 குழந்தைகளில் 40 பேருக்கும் இது பெருந்தொல்லை தருகிறது. மாசடைந்த சூழல் உள்ள இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் அனைத்திலும் இந்தப் பாதிப்பு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.

என்ன காரணம்?

அன்றாட வாழ்வில் நாம் தூசி கலந்த காற்றையே சுவாசித்து வருகிறோம். ஏதேனும் ஓர் அலர்ஜிப் பொருள் நாசி வழியாக நுழையுமானால், மூக்கின் உட்புற சவ்வில் ’உடனடி அலர்ஜி’ (Immediate Hypersensitivity) உண்டாகிறது. இதனால் அந்தப் பகுதி விரிந்து சிவந்து வீங்குகிறது. இதன் தூண்டுதலால் அடுக்குத் தும்மல் ஏற்படுகிறது. மூக்கு ஒழுக ஆரம்பிக்கிறது. குறிப்பாக, புல், பூண்டு, மரம், செடிகளின் பூக்களிலிருந்து வரும் மகரந்தங்கள், பார்த்தீனியச் செடியின் முள்ளிழைகள், பூஞ்சைகள் ஒவ்வாமைத் தும்மலை ஏற்படுத்துவதில் முன்னணியில் நிற்கின்றன. அடுத்ததாக, வீட்டுத்தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டால் தும்மல் தொடர்ந்து வரும். இதுபோல் குளிர் காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை முதலியவை அடுக்குத் தும்மலுக்கு வழிவிடும்.

படுக்கை விரிப்புகள், பாய், தலையணை, மெத்தை ஆகியவற்றில் காணப்படுகின்ற ‘ஹௌஸ் மைட்’ பூச்சிகள், வீட்டு வளர்ப்புப் பிராணிகளின் உடலிலிருந்து கிளம்பும் செதில்கள், எச்சங்கள் மற்றும் முடிகள் காரணமாகவும் இந்த நோய் வருவதுண்டு. இன்றைய வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம்கூட இதற்கு ஒரு காரணம்தான் என்கிறது நவீன மருத்துவம்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்?

இது பெரும்பாலும் இருபது வயதுக்குள் வந்துவிடுகிறது. பரம்பரைக்கும் இந்த நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அப்பா, அம்மாவுக்கு இது இருந்தால், வாரிசுகளுக்கு இது ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். அதிலும் அம்மாவுக்கு இருந்தால், குழந்தைகள் இந்த நோயிலிருந்து தப்புவது கடினம்.

ஜலதோஷமா? அலர்ஜியா?

ஒருவருக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் சாதாரணமாக ஒரு வாரத்துக்கு நீடிக்கும். முதல் மூன்று நாட்களுக்கு ஜலதோஷம் அதிகரிக்கும். அடுத்த சில நாட்களில் மூக்கு ஒழுகல், தும்மல், மூக்கடைப்பு ஆகியவை குறைந்துவிடும். ஜலதோஷம் என்பது வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது. தலைவலி, காய்ச்சல் போன்ற துணை அறிகுறிகளும் இதில் காணப்படும். வழக்கத்தில் ஜலதோஷத் தும்மல் சில நிமிடங்களில் நின்றுவிடும்.

ஆனால், அடுக்குத் தும்மல் அப்படியில்லை. காலையில் எழுந்ததும்தான் தும்மல் ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக தும்முவார்கள். மூக்கு அரிக்கும் என்பதால் இவர்கள் அடிக்கடி மூக்கை உறிஞ்சுவார்கள்; கசக்குவார்கள். இதைத் தொடர்ந்து மூக்கு அடைக்கும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். கண்கள் சிவந்து கண்ணீர் வரும். இவை எல்லாமே காலை பத்து மணி வரைக்கும்தான். வெயில் ஏறியதும் இந்தத் தொல்லைகள் எல்லாமே சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும். பிறகு வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். மறுநாள் காலையில் மறுபடியும் தும்மல் வரும். இது ஒரு தொடர்கதையாகும்.

பூ பூக்கும் காலம் பனி, குளிர் எனக் குறிப்பிட்ட பருவம் முடிந்ததும் நிறைய பேருக்கு இந்தத் தொல்லைகள் மறைந்துவிடும். சிலருக்கு அவர்களுக்கு உண்டான அலர்ஜிப் பொருள் மறைந்ததும் தும்மல் அகன்றுவிடும். வெகு சிலருக்கு மட்டுமே இது வருடம் முழுவதும் தொடரும்.

பாதிப்புகள் என்ன?

இந்த நோயை அலட்சியப்படுத்தினால் அல்லது அறைகுறையாக சிகிச்சை எடுத்தால் சைனஸ் பிரச்சினை, ஆஸ்துமா, காதுப் பிரச்சினை, மூக்கில் நீர்ச் சதை (Nasal polyp) வளர்வது, அடிக்கடி நெஞ்சில் சளி பிடிப்பது, கண் சிவப்பது, வாய் வழியாக மூச்சு விடுவது, தூக்கம் கெடுவது, உடல் சோர்வு, மனச்சோர்வு எனப் பல தொல்லைகளை துணைக்கு அழைக்கும்.

என்ன பரிசோதனை?

அடுக்குத் தும்மல் உள்ளவர்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களில் இயோசினோபில் அணுக்களின் அளவு அதிகமாக இருக்கும். ‘எலிசா ஐஜிஇ’ (ELISA IgE) பரிசோதனையில் ஐஜிஇ அளவு அதிகமாக இருக்கும். ஒவ்வாமைத் தோல் ஊசிப் பரிசோதனையில் (Skin Prick Test) எந்தப் பொருளுக்கு அலர்ஜி என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மூக்கு என்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் தும்மலுக்கு வேறு காரணம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, மூக்கில் நீர்ச் சதை இருந்தாலும் இம்மாதிரியான தும்மலை ஏற்படுத்தும். முகத்தை சிடி ஸ்கேன் எடுப்பதன் மூலம் மற்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பதும் தெரிந்துவிடும்.

தும்மலை நிறுத்தும் வழிகள்

ஒரு தேக்கரண்டி சமையல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எட்டில் ஒரு பங்கு உப்பை 200 மி.லி. இளம் சூடான தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இப்போது சுத்தமான துணியை அந்தத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கொண்டு, திரி போல சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாசித்துளையிலும் விட்டு மூக்கைச் சுத்தப்படுத்துங்கள். தும்மல் நிற்கும். அடுத்த வழி இது: ஆவி பறக்கும் வெந்நீரில் ‘டிங்சர் பென்சாயின்’ மருந்தில் 15 சொட்டு விட்டு ஆவி பிடித்தாலும் தும்மல் கட்டுப்படும்.

‘ஸ்டீராய்டு’ கலந்த ஸ்பிரே மருந்தை மூக்கில் உறிஞ்சிக்கொண்டால், தும்மல் உடனே நின்றுவிடும். அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகள் உதவும். இவற்றில் உறக்கம் தரும் மாத்திரைகள், உறக்கம் குறைந்த மாத்திரைகள் எனப் பலவிதம் உண்டு. மருத்துவர் யோசனைப்படி சாப்பிட வேண்டும். மான்டிலூகாஸ்ட் மாத்திரைகளைச் சாப்பிடலாம். இது தும்மலின் தாக்கத்தைக் குறைக்கும். மூக்கடைப்புக்குச் சொட்டு மருந்தை உபயோகிக்கலாம். ஆனால், மூன்று நாட்களுக்கு மேல் இதைப் பயன்படுத்தக்கூடாது. ஸ்டீராய்டு மாத்திரையைச் சாப்பிட்டால் உடனே தும்மல் குறையும். ஆனால், இதையும் சில நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டால், பக்கவிளைவுகள் ஏற்படும். இந்த விஷயத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

தடுப்பது எப்படி?

ஒருவருக்கு எந்தப் பொருள் அலர்ஜி ஆகிறது எனத் தெரிந்துகொண்டு அதைத் தவிர்ப்பதுதான் இந்த நோயைத் தடுப்பதற்கான முக்கிய வழி. உதாரணத்துக்கு, பூக்களின் மகரந்தம் அலர்ஜி என்றால், இளங்காலை நேரத்திலும் அந்திப்பொழுதிலும் வீட்டைவிட்டு வெளியில் வருவதை, நடைப்பயிற்சி செய்வதை, பூங்காக்களுக்குச் செல்வதை, தோட்ட வேலை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பனிக் காலத்திலும், பூ பூக்கும் காலத்திலும் அறை சன்னல்களை காலை பத்து மணி வரைக்கும் பூட்டி வைக்க வேண்டும். தூசுதான் காரணம் என்றால் வீட்டையும் அலுவலகத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். முக்கியமாக, படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் படுசுத்தமாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துகொள்வது நல்லது.

எந்தப் பொருளுக்கு அலர்ஜி ஆகிறதோ அதற்கான தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டால், அடுக்குத் தும்மல் குறையும். இதற்கு ‘இமுனோதெரபி’ என்று பெயர். பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள், யோகாசனம், தியானம் போன்றவை இந்த நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button