இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் காணாமல்போயிருந்த வயோதிபப் பெண் உரப்பையிலிருந்து சடலமாக மீட்பு

dead body

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் காணாமல்போயிருந்த வயோதிபப் பெண், இன்று (28) உரப்பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமொன்றுக்கு கீழிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

லண்டனில் தமது மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி என்ற 67 வயதான குறித்த பெண், 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியைப் பராமரிப்பதற்காக, வாடகை வீடொன்றில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனிமையில் வசித்துவந்த குறித்த பெண், நேற்றைய தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து, குறித்த பெண் காணாமல்போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நேற்று மாலை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறைகளும் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

சம்பவம் தொடர்பில் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இன்று முற்பகல் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button