மன்னாரில் இன்று இடம்பெற இருந்த இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை இறுதி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் வருகை தந்த கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தலைமன்னார், பியர் இறங்குதுறையில் இன்று மதியம் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஏல விற்பனையில் கலந்துகொண்டு படகுகளைக் கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலைமன்னார் – பியர் இறங்குதுறைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
எனினும், அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம்பெறவில்லை என வருகை தந்த கொள்வனவாளர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காகக் காத்திருந்தபோதும் இறுதி நேரத்திலேயே குறித்த ஏல விற்பனை இடம்பெறாது என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தூர இடங்களில் இருந்து வருகை தந்த கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.