![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/Polar_low.jpg?resize=480%2C463&ssl=1)
தென் சீன கடல் பிராந்தியத்தில் உருவாகிய காற்று சுழற்சியானது, தற்போது தாய்லாந்து வளைகுடா கடல் பிராந்தியத்தின் ஊடாக வந்து கொண்டிருக்கின்றது.
இது இன்று (30) மாலை அல்லது இரவு தாய்லாந்தின் நிலப் பகுதியின் ஊடாக ஊடறுத்து அந்தமான் கடல் பிராந்தியத்தில் தாழமுக்க பகுதியாக (Low Pressure Area) வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தாழமுக்கமாக (Depression) வலுவடைந்து, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் எதிர்வரும் 02ஆம் திகதி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்னர் இது அதனை அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடையும் என ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்ற போதிலும் அது ஒரு சூறாவளியாக வலுவடையும் என இன்று இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களமும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு சவுதி அரேபியா நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட JAWAD எனும் பெயர் வழங்கப்படும்)
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து கிட்டத்தட்ட எதிர்வரும் 04ஆம் திகதி அளவில் வட ஆந்திர பிரதேசத்திற்கும் ஒரிசா மாநிலத்திற்கு இடையில் கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஏற்கனவே இலங்கைக்கு மேலாக காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போதும் செயலிழந்து கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமல்லாது ஏற்கனவே அராபிய கடல் பிராந்தியத்தில் லட்சதீவு அருகே காணப்பட்ட தாழமுக்கம் ஆனது நன்கு அமைந்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து குஜராத் கரை ஓரமாக வடமேற்கு திசையில் நகர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கரையோரமாக தெற்கு நோக்கி நகர்ந்து தாழ்வு நிலையாக அதன் வலு குறைவடைந்து லட்சத்தீவு அருகே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.