கவிதைமுத்தமிழ் அரங்கம்.

ஏது காதல் ? – எது காதல் ?

love

எழுத்து – கரவையூர் தயா.

கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்
கலவரம் தானோ காதல்
மனவறைக் குள்ளே மணவறை காணும்
மதுரச மாமோ காதல்
தினசரி போலே தினம்விழி பார்க்கத்
தேடிடுவ தாமோ காதல்
இனசனம் கூட்டி இல்லற வாழ்வில்
இணைத்திடும் தேனோ காதல்

*

இருவரு மொன்றி இருதயம் சேர்க்கும்
இலக்கிய மாமோ காதல்
ஒருவரு மறியா உறவது காணும்
ஒருவரம் தானோ காதல்
திருமண மென்னும் திருவிழா காணும்
தெய்வமோ இந்த காதல்
கருவினை சுமக்க கணவரைச் சேரும்
கவிதையைப் போலோ காதல்
*

இல்லற வண்டி இயங்கிட வுள்ள
எரிபொரு ளாமோ காதல்
அல்லலில் சிக்கி அவதிகள் கொள்ளும்
ஆபத் தாமோ காதல்
மெல்லவும் முடியா விழுங்கவும் முடியா
மீன்முள் போலோ காதல்
சொல்லவே முடியா சோதனை யான
சோகமோ இந்தக் காதல்
*
கள்வனைப் போலே கனவினில் வந்து
கதையளப் பதாமோ காதல்
முள்ளுக் கொடியில் முகையை அவிழ்க்கும்
மோகப் பூவோ காதல்
பிள்ளைகள் நாலு பெற்றதன் பின்னே
பிறைபோல் தேய்வதோ காதல்
உள்ளநாள் வரைக்கும் உயிருடன் உயிரை
உயிராய் கொள்வதோ காதல்?


கரவையூர் தயா.

Related Articles

Leave a Reply

Back to top button