![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/Lionel-Guruge-Senior-Research-Officer.jpg?resize=708%2C738&ssl=1)
ஊடகவியலாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும் தமது நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக அதன் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே தெரிவித்தார்.
இது விடயமான செயலமர்வு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிலையத்தில் புதன்கிழமை 09.03.2022 இடம்பெற்றது.
நிகழ்வில் ஊடகவியலாளர்களும் சமூக நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆய்வாளர் லயனல் குருகே, யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நெருக்கடிகள் குறையும் என எதிர்பார்த்திருந்த போதும் அது நடக்கவில்லை. சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பது, சுதந்திரமாக செயற்படுவது, சுதந்திரமாக வாழ்வது இப்படி எதுவும் நெருக்கடி இல்லாத ஒன்றாக இல்லை. அதிலும் குறிப்பாக ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் சுதந்திரமாக செயற்படமுடியவில்லை என்ற நிலைப்பாடு உள்ளது.
எனவே, இந்த விடயத்தைச் சீர்தூக்கிப் பார்த்து அந்த நெருக்கடிகளைச் சந்திப்போருக்கு நாம் உதவ முயற்சிக்கின்றோம். வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் மத்திய பகுதியிலும் தென்பகுதியிலும் இத்தகைய விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
முன்னதாக நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த விடயங்களை நாம் ஆவணப்படுத்துவதோடு அதுபற்றி நாம் சர்வதேச மட்டம்வரை வெளிப்படுத்துவோம்.
எனவே, இந்த விடயத்தில் ஊடகவியலாளர்களும் சமூக சேவைகளில் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்துடன் இணைந்து பணியாற்றி நிலைமையைச் சீர் செய்வது அவசியமாகும்.” என்றார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடக வளவியலாளரும் ஆய்வாளருமான ஜயசிறி ஜயசேகர உட்பட இன்னும் பல துறைசார்ந்த செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/DSC_5346-1024x526.jpg?resize=708%2C364&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/DSC_5375-1024x543.jpg?resize=708%2C375&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/DSC_5385-1024x583.jpg?resize=708%2C403&ssl=1)
செய்தியாளர் – சக்தி