இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

படுகொலை செய்யப்பட்டோருக்காக நினைவுத்தூபி – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால் உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு இடம் ஒதுக்கித் தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த விடயம் தொடர்பில் எமது வைத்தியசாலையின் பல்வேறுபட்ட குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பின் புதிய வசதி ஒன்று செய்யப்பட்டு ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது, யாழ்ப்பாண வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

தற்போது வைத்தியசாலையை நோக்கி பல்வேறு நோய் உடையவர்களும் பிரச்சினை உடையவர்களும் சிகிச்சைக்காக வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

கோவிட் தாக்கம் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் கோவிட் சிகிச்சைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று விடுதிகள் இயங்கிய வண்ணம் உள்ளன.

கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை வசதிகள் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆகவே பொது மக்கள் அவர்களுக்கு கடுமையான வருத்தங்கள் ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவர்கள் வைத்தியசாலைகளை நாட வேண்டும்.

அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது போதனா வைத்தியசாலைக்கு வந்து தங்களுடைய வருத்தங்கள் சம்பந்தமாக ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதேவேளை அனைவரும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியினை பெறாத நிலையில் அவர்களுக்கு ஏதாவது சிகிச்சைகளுக்கு அல்லது வைத்திய தேவைக்காக வர வேண்டுமாக இருந்தால் அவர்கள் வர முடியும்.

தடுப்பூசி போடாதவர்கள் என்ற ரீதியில் அவர்களை நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை. அவர்களுக்கும் ஏனையவர்களுக்கு போன்று சகல விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக வயோதிபர்கள், இளம் வயதினர் சிலர் தமக்கு விருப்பமான தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற நோக்கில் தாமதப்படுத்தி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாது விடாது தமக்குரிய தடுப்பூசியினை விரைவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button