![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/11/22-637db4630fc8b.webp?resize=600%2C400&ssl=1)
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் (25). போதைக்கு அடிமையான இவர் மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு திரும்பிய கேசவ், தன் குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. கேசவ் மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவரது குடும்பத்தினர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கேசவ், தனது தந்தை தினேஷ் (50), தாய் தர்சனா, தங்கை சைனி மற்றும் பாட்டி தேவானா தேவி (75) ஆகிய நான்கு பேரையும் குத்திக் கொலை செய்துள்ளார்.
அவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, கேசவ்வின் குடும்பத்தினர் அனைவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தப்பியோடிய கேசவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதையில் இருந்த கேசவ் மேலும் மது வாங்க பணம் கேட்டுள்ளார். குடும்பத்தினர் மறுக்கவே அவர்களை படுகொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் ஒருவர் தனது மொத்தம் குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.