![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/MINISTRY_OF_DEFENCEbnmbhjv.jpg?resize=650%2C440&ssl=1)
தடை நீக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மீண்டும் உறுதியானால், மீண்டும் அவர்களை கருப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் 18 அமைப்புகள் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 577 நபர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு பிரிவுகள், சட்ட அமுலாக்கல் பிரிவினர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அடங்கிய குழுவொன்றினூடாக, பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் மேற்குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் கிடைத்த ஆதாரங்களுக்கமைய பாதுகாப்பு அமைச்சில் நடாத்தப்பட்ட பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பின், கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட மற்றும் சேர்க்கப்பட வேண்டிய நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகளிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டாத 316 நபர்கள் மற்றும் 6 அமைப்புகளை பட்டியலிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் மீண்டும் ஆதரவளித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.