இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்முக்கிய செய்திகள்

வடக்கு, கிழக்கு கட்சிகளின் பயணத்துக்குத் தடையாக இருக்கமாட்டோம்! – மனோ அணி அறிவிப்பு

“வடக்கு, கிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. அதேவேளை, நமது பயணத்தையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லை.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது .

தமிழ் முற்போக்குக் கூட்டணியில் மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் எம்.பி. தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் மேற்படி மூன்று கட்சிகளின் தலைவர்களும் இணைந்து இன்று கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு:-

‘இந்தியப் பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்பக் கடிதம்’ என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களிப்பு வடக்கும், கிழக்கு தமிழ்க் கட்சிகளின் சுதந்திரச் செயற்பாட்டுக்குப் பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும் இந்தச் செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் என்ற பொதுநோக்கில், இந்தச் செயற்பாட்டை ஆரம்பித்த ஏற்பாட்டாளர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி., இணைப்பாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம்.

அதேவேளை, பொது இணக்கப்பாட்டின் மூலம் பொது ஆவணம் தயாரிக்க முடியாமையைக் கருத்தில்கொண்டு மலையகத் தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரதப் பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் தனித்தனியாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில் ஆவணக் கடிதம் எழுதப்படும்.

முதல் கலந்துரையாடல்

‘இலங்கை அரசமைப்பில் ஏற்கனவே உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதி செய்து, மாகாண சபைத் தேர்தலையும் விரைந்து நடத்த இலங்கை அரசை வலியுறுத்த, இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கோருதல்’ என்ற அடிப்படையிலான அழைப்பின் பேரிலேயே ஏற்பாட்டாளர்களால் இந்தக் கூட்டுச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளும் கடந்த நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் கலந்துகொண்டன.

நோக்கம்

இலங்கை அரசமைப்பில் இடம்பெற்றுள்ள ஒரே அதிகாரப் பரவலாக்கல் சட்டமான 13ஆவது திருத்தம் என்பதை இறுதித் தீர்வாகக் கருதி இந்தப் பேச்சு ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், இலங்கை அரசு, இந்தக் குறைந்தபட்ச சட்டத்தைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல் இழுத்தடிப்பதுடன், இந்தச் சட்டமூலம் மாகாண சபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களையும்கூட வாபஸ் பெறுகின்றது என்ற உண்மை உலகுக்கு அதிகாரபூர்வமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே எமது பொது நோக்காக இருந்தது.

தமிழரசுக் கட்சி
உள்வாங்கல்

இந்தச் செயற்பாட்டில், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேரடியாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் சந்தித்து அழைப்பு விடுத்ததையும், தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து விட்டு விண்ணப்பக் கடிதத்தில் கையெழுத்திடும் யோசனையை, தமிழ் முற்போக்குக் கூட்டணியாகிய நாம் நிராகரித்தோம் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் நன்கறிவார்கள்.

பொது ஆவணக் கடிதம்

ஆரம்பத்தில், பாரதப் பிரதமருக்கான கடித வரைபு, அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும், பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளைக் கொண்ட விண்ணப்பக் கடிதமாக சுமார் ஒன்றரைப் பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. எனினும், தொடர்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது, தமிழ்த் தேசிய அரசியலின் சமகால வரலாறு முழுமையாக அதில் எழுதப்பட்டு, எட்டு பக்கங்களைக் கொண்ட நீண்ட ஆவணக் கடித வரைபாக மாற்றப்பட்டது. இதன் பின்னுள்ள நியாயப்பாட்டை எம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது.

ஆனால், ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் சார்பான கடிதம் என்பதால், இதே நியாயப்பாட்டின் அடிப்படையில், இந்தக் கடிதத்தில் மலையகத் தமிழ் மக்களின் அபிலாஷகளும் உள்ளடக்கப்பட வேண்டிய இயல்பான தேவைப்பாடு எழுந்தது. மேலதிகமாக இந்த ஆவணக் கடித வரைபு, இறுதி வடிவம் பெறமுன்னரே ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு வாதப்பிரதிவாதங்களை தமிழ் பேசும் அரசியல் சமூக பரப்புகளில் ஏற்படுத்தியது.

பொது ஆவணக் கடிதம் நிராகரிப்பு

இந்நிலையிலேயே, கடந்த வருடத்தின் இறுதி நாளான்று (டிசம்பர் 31ஆம் திகதி), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உட்பட கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மறுநாள் இவ்வருடத்தின் முதல் நாள் (ஜனவரி 01), கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் கூடி புதிய கடித வரைபு தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆவணக் கடித வரைபு, உடனடியாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதை நாம் அறிந்தோம்.

மலையகத் தமிழரின்
அபிலாஷைகளை
முன்னிறுத்தி ஆவணக்கடிதம்

ஆகவே, பொது ஆவணம் தயாரிக்க முடியாமையைக் கருத்தில்கொண்டு சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையகத் தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரதப் பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் ஆவணக் கடிதம் எழுத தமிழ் முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது.

வடக்கு, கிழக்கு உடன்பிறப்புகளுக்கு
எமது ஒத்துழைப்பு தொடரும்

இந்தப் பின்னணிகளிலேயே, தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்க்கும் நோக்கில், “வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் இந்தச் செயற்பாட்டுக்கு வெளியில் நின்று ஒத்துழைப்புகளை வழங்குவோம்” என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கு உடன்பிறப்புகளுக்கு, வரலாறு முழுக்கவும் இதை நாம் செய்துள்ளோம். இனியும் செய்வோம். “உரிமைக்குக் குரல் கொடுப்போம்; உறவுக்குக் கை கொடுப்போம்” என்ற எமது கொள்கை தொடரும் – என்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button