இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் தாயும் மகளும் தீயில் கருகிய உயிரிழந்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில்  தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் 20.01.2022 சடலமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஆனந்தராசா சீதேவி எனும் 47 வயதான ஏழு பிள்ளைகளின் தாயாரும் அவரது 17 வயது மகளான லக்சிகா என்பவரும் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் 22. 01. 2022 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான்
எஸ். லெனின்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் மேற்கொண்ட  ஆராய்வின் போது அப்பகுதியிலிருந்து பெற்றோல் போத்தல், கைத்தொலைபேசி ஒன்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த மூவர் நேற்று மாலை தர்மபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ‘ஊத்தை’ என அடைமொழியால் அழைக்கப்படும் நபர் பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் ‘தாய் மகள்’ மரணத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ள தமது உறவினர்களுக்கு எவ்வித தொடர்புமில்லை. பொலிஸார் எழுந்தமானமாக கைது செய்துள்ளனர் என தெரிவிக்கின்றனர்.

தர்மபுரம் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் தீவிரமான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button