உலகம்செய்திகள்பிரதான செய்திகள்

கனடா, ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கான முக்கிய தகவல்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இலங்கை தமிழர்கள் பலர் கனடா மற்றும் ஐரோப்பாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. ஏனெனில் உங்களால் கைவிடப்பட்ட சொத்துகள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன.

அண்மைக்காலத்தில் இலங்கையிலுள்ள அல்லது இலங்கையராக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற பலரதும் பேசுபொருளாக மாறியிருக்கும் ஒரு விடயம் தான் இந்த “இரட்டைப் பிரஜாவுரிமை”.

மிக நீண்டகாலத்துக்கு முன்பதாகவே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் முறையானது நடைமுறையில் உள்ள போதிலும், போருக்கு பிந்திய அபிவிருத்தி சூழல், பலரையும் இரட்டை பிரஜாவுரிமையின் கீழ் இலங்கைக்கு வரவும், அதன் மூலமான நலன்களை உச்சமாகப் பெற்றுக் கொள்ளவும் தூண்டியுள்ளது எனலாம்.

நீண்ட காலமாக இலங்கை வராது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் காணிகள் உள்ளிட்ட சொத்துக்கள் தற்போது அபகரிக்கப்படுகின்றன. குறிப்பாக படையினர் பல்வேறு தேவைகளுக்காக காணிகளை அபகரித்து வருகின்றனர்.

இதில் உங்களது காணிகளும் இருக்கக்கூடும். மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டும் உங்களது காணிகள் உள்ளிட்ட சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், உங்கள் சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாத்துக் கொள்வதற்கும், ஏனைய தேவைகளுக்கும் நீங்கள் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை மூலமாக, வெளிநாட்டில் குறித்த நாட்டின் நலன்களையும், இலங்கையில் இந்நாட்டின் சாதாரண குடிமகனாவும் சகல நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.

இலங்கையில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்வதில் சட்டச்சிக்கல் உள்ள நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலகுவாக அசையும் மற்றும் அசையாத ஆதன சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும்.

அண்மைக்காலத்தில், இலங்கையின் ஆதனத்துறையின் கேள்வி அதிகரித்து செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

இலங்கையில் வெளிநாட்டவர்களாக வணிகத்தினை ஆரம்பிப்பதிலும் பார்க்க, இலங்கையராக ஒப்பீட்டளவில் செலவினக் குறைப்புடன் வணிகத்தினை ஆரம்பிக்க முடியும்.

மேலே குறிப்பிட்ட அனைத்துமே, அடிப்படையாக ஒருவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதன் மூலமாக பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகள் ஆகும்.

இதனைத் தவிரவும், நிதி ரீதியாக, வரி ரீதியாக மேலும் பல நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமைக்கு ஏன் திடீரென கேள்வி நிலை அதிகரித்துள்ளது? யார் எல்லாம் இதனை பெறத்தகுதி உடையவர்களாக உள்ளார்கள்? எப்படி இதனை பெற்றுக்கொள்ள முடியும்? என அறிந்திருப்பது அவசியம் அல்லவா!

இது குறித்த முழுமையான தகவல்களை இங்கே காண முடியும்,

01. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது, 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19, 20 மற்றும் 21ஆம் பிரிவுகளின் கீழ், இலங்கை பிரஜாவுரிமையை/ குடியுரிமையை இழந்த ஒருவருக்கு அல்லது இலங்கைப் பிரஜாவுரிமையை/ குடியுரிமையை இழக்க அண்மித்திருக்கும் ஒருவருக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  1. குடியுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் கீழ் பிறிதொரு நாட்டின் குடியுரிமையை பெற்றுக் கொண்டதன் பேரில், இலங்கைக் குடியுரிமையை இழந்த ஒருவருக்கு, அல்லது
  2. குடியுரிமைச் சட்டத்தின் 19(3) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் கீழ் பிறிதொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாட்டின் பேரில், இலங்கைக் குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஒருவருக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கக் கோரி விண்ணப்பிக்க முடியும்.

02. விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

  1. விண்ணப்பப் படிவத்தை ஆங்கில மொழியில் பூரணப்படுத்துதல் வேண்டும். (தயவு செய்து ஆங்கில பெரிய எழுத்துக்களைப் (ENGLISH BLOCK CAPITALS) பயன்படுத்தவும்).
  2. விண்ணப்பப் படிவத்தில் * குறியீடு இடப்பட்டுள்ள எல்லா இடங்களிலும்/ சந்தர்ப்பங்களிலும் தேவையற்ற சொல்லை அல்லது சொற்களை வெட்டிவிடவும்.
  3. விண்ணப்பப் படிவத்தில் தேவையற்ற/ ஏற்புடையதாகாத பிரிவுகள்/ பகுதிகள் இருப்பின் உரிய இடங்களில் “ஏற்புடையதாகாது” எனக் குறிப்பிடவும்.
  4. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்களாக இருப்பினும் ஒவ்வொருவருக்குமாக தனித் தனியாக விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், 3.5cm x 4.5cm அளவிலான 03 வர்ணப் புகைப்படங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும். அவற்றுள் ஒரு புகைப்படத்தை விண்ணப்பப் படிவத்தின் வலது பக்க மேல் மூலையில், புகைப்படத்தை ஒட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கூண்டினுள் ஒட்டவும்.
  5. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பப் படிவத்தில் இல. 1 இன் கீழ் A தொடக்கம் G வரை காட்டப்பட்டுள்ள தகைமைகளுள் ஏதேனுமொரு தகைமையினை பூர்த்தி செய்திருத்தல் போதுமானதாகும். அதற்கமை உரிய தகைமை குறிப்பிடப்பட்டுள்ள கூண்டினுள் (√) அடையாளத்தை இடவும்.
  6. விண்ணப்பப் படிவத்தின் 6 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள உறுதிமொழியை/ சத்தியப் பிரமாணத்தை, விண்ணப்பதாரி பூரணப்படுத்துதல் வேண்டும் என்பதுடன், அந்த உறுதிமொழி/ சத்தியப் பிரமாணம், சமாதான நீதவான் ஒருவரினால் அல்லது சத்தியப் பிரமாண ஆணையாளர் ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தலும் வேண்டும்.
  7. கணினி தரவுப் பத்திரத்தை ஆங்கில பெரிய எழுத்தில் (ENGLISH BLOCK CAPITALS) பூரணப்படுத்துதல் வேண்டும்.
  8. தமது வயது 22 வருடங்களுக்குக் குறைந்த திருமணமாகாத விண்ணப்பதாரிகள் மட்டும், இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பப் படிவத்திற்கு மேலதிகமாக இணைப்பு 03 ஐயும் பூரணப்படுத்துதல் வேண்டும் என்பதுடன், தமது வயது 22 வருடங்களும், 06 மாதங்களும் கடந்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் இவ் வகையின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

03. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க). (விண்ணப்பதாரி இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டிருப்பது பதிவின் மூலமாயின், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழை அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதியினை சமர்ப்பிக்கவும்).
  2. விண்ணப்பதாரி விவாகமானவராயின், விவாகச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க).
  3. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர் குடியுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழ், இலங்கைக் குடியுரிமையை இழந்த ஒருவராக இருக்கும் நிலையில் இருக்கும் ஒருவராக இருப்பின், அவர் பின்வரும் ஆவணங்ளைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

                               a. வெளிநாட்டு குடியுரிமைச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க).

                               b. தற்சமயம் வெளிநாட்டு குடியுரிமையைக் கொண்டுள்ள நாட்டினால் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டின் தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தினதும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பக்கங்களினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள் (குறிப்பு 01 ஐப் பார்க்க).

                               c. விண்ணப்பதாரி தற்சமயம் பிரஜாவுரிமையை கொண்டிருக்கும் நாட்டிலிருந்து பெற்றுக் கொண்ட பொலிஸ் இசைவுச் சான்றிதழ் (Police Clearance Certificate). (உரிய இசைவுச் சான்றிதழானது, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு 03 மாதங்களுக்குக் கூடாத காலப்பகுதிக்குள் பெற்றுக் கொண்ட ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்ட இசைவுச் சான்றிதழாக இருத்தல் வேண்டும். இவ் இசைவுச் சான்றிதழ் ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்டில்லை எனில், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சமர்ப்பித்தல் வேண்டும்.).

                              d. இலங்கைக் கடவுச்சீட்டின் தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தினதும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பக்கங்களினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள் (உரிய கடவுச்சீட்டு இருப்பின் மட்டும்).

அல்லது இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர் குடியுரிமைச் சட்டத்தின் 19(3) ஆம் பிரிவின் கீழ், இலங்கைக் குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஒருவராக இருக்கும் நிலையில் இருக்கும் ஒருவராக இருப்பின், அவர் பின்வரும் ஆவணங்ளைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

                               a. தற்போதுள்ள இலங்கைக் கடவுச்சீட்டின் தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தினதும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பக்கங்களினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள் (குறிப்பு 01 ஐப் பார்க்க).

                               b. நிரந்தர வதிவிட வீசாவின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க).

                               c. விண்ணப்பதாரி தற்சமயம் நிரந்தர வதிவிட வீசாவினைக் கொண்டிருக்கும் நாட்டிலிருந்து பெற்றுக் கொண்ட பொலிஸ் இசைவுச் சான்றிதழ் (Police Clearance Certificate). (உரிய இசைவுச் சான்றிதழானது, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு 03 மாதங்களுக்குக் கூடாத காலப்பகுதிக்குள் பெற்றுக் கொண்ட ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்ட இசைவுச் சான்றிதழாக இருத்தல் வேண்டும். இவ் இசைவுச் சான்றிதழ் ஆங்கில மொழியில் விநியோகிக்கப்பட்டில்லை எனில், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சமர்ப்பித்தல் வேண்டும்.).

          4. விண்ணப்பதாரியின் வயது 55 வருடங்கள் பூர்த்தியின் பேரில் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதாயின் (1.A இன் கீழ்) விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க).

          5. கல்வி/ தொழில்சார் தகைமையின் கீழ் (1.B இன் கீழ்) விண்ணப்பிப்பதாயின், உரிய கல்வித் தகைமையை அல்லது தொழில்சார் தகைமையை உறுதிப்படுத்தும் வகையில் உரிய சான்றிதழ்கள் அல்லது அவற்றின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள். (ஆகக் குறைந்த கல்வித் தகைமையாக 01 வருட டிப்ளோமா பாடநெறியொன்றினைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அதிலும் கூடிய பிற கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளும் கருத்திற் கொள்ளப்படும்).

         6. இலங்கையிலுள்ள ரூபா 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பெறுமதியான அசையா/ நிலையான சொத்துகளை/ ஆதனங்களைக் கொண்டுள்ளதன் மீது விண்ணப்பிப்பதாயின் (1.C இன் கீழ்), உரிய நிலையான சொத்துக்களுக்குரிய/ ஆதனங்களுக்குரிய ஆவணங்களின் (உறுதிகள் முதலியன) மூலப்பிரதிகளுடன் நிழற் பிரதிகளையும் சமர்ப்பித்தல் வேண்டும். இங்கு உரிய சொத்துக்களின்/ ஆதனங்களின் அல்லது காணிகளின் உறுதிகள் (Deeds), விலை மதிப்பீட்டு அறிக்கை (valuation report), உரித்து அறிக்கை (title reports) என்பவற்றை சமர்ப்பித்தல் வேண்டும். விலைமதிப்பீட்டு அறிக்கை மற்றும் உரித்து அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்குள், அவ் அறிக்கைகளுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும். இங்கு விலை மதிப்பீட்டு அறிக்கையானது, விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விலை மதிப்பீட்டாளரொருவரினால் தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

         7. ரூபா 2.5 மில்லியனை அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வர்த்தக வங்கியிலேனும் 3 வருட காலத்திற்கு நிரந்தர வைப்பில் வைப்பிலிட்டு, அதற்கமைய விண்ணப்பிப்பதாயின் (1.D இன் கீழ்), இப் பணத்தை 03 வருடங்களுக்குள் மீளப் பெற்றுக் கொள்வதில்லை என்பதை உறுதிப்படுத்தி உரிய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட அத்தாட்சியை/ சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும்.

         8. 25,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வர்த்தக வங்கியிலேனும், வதியாதோர் அந்நியச் செலாவணி கணக்கொன்றில் (NRFC)/ வதிவோர் அந்நியச் செலாவணி கணக்கொன்றில் (RFC) அல்லது சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக் கணக்கொன்றில் 3 வருட காலத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு நிரந்தர வைப்பில் வைப்பிலிடுவதன் மூலம் விண்ணப்பிப்பதாயின் (1.E இன் கீழ்), உரிய நிலையான வைப்புச் சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும்.

         9. விண்ணப்பதாரி திறைசேரி உண்டியல்களில் (TB) அல்லது பிணையங்கள் வைப்புக் கணக்கொன்றில் (SIA) 25,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை, 3 வருடங்களுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு முதலீடு செய்து, அதற்கமைவாக விண்ணப்பிப்பதாயின் (1.F இன் கீழ்), அதற்குரிய சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும்.

       10. விண்ணப்பப் படிவத்தில் இல. 1 இல் காட்டப்பட்டுள்ள A தொடக்கம் F வரை காட்டப்பட்டுள்ள தகைமையினைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரியொருவரின் வாழ்க்கைத்துணை அல்லது அவரது 22 வயதுக்குக் குறைந்த திருமணமாகாத பிள்ளையொன்று இருத்தல் மீது அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிப்பதாயின் (1.G இன் கீழ்), பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.

                             i. வாழ்க்கைத் துணையின் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க).

                             ii. 22 வயதுக்கு குறைந்த திருமணமாகாத பிள்ளைகளுக்கு, பிள்ளை இலங்கையில் பிறந்திருப்பின், பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க). பிள்ளை இலங்கைக்கு வெளியே பிறிதொரு நாட்டில் பிறந்திருப்பின், குடியுரிமைச் சட்டத்தின் 5(2) ஆம் பிரிவின் கீழ் விநியோகிக்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க). பெற்றோரின் இலங்கைக் கடவுச்சீட்டுகளையும், பிற நாட்டின் வீசாக்களையும் சமர்ப்பித்தல் வேண்டும். தமது வயது 22 வருடங்களும், 06 மாதங்களும் கடப்பதற்கு முன்பதாக விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும். எவ்வாறாயினும், பணம் செலுத்தும் சந்தர்ப்பத்தில் வயது 22 வருடங்கள் கடந்திருப்பின், அவர் பிறிதொரு வகையின் (1A-1F) கீழ் மீண்டும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும். தமது வயது 22 வருடங்களும், 06 மாதங்களும் கடந்த விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள், 2019.07.01 ஆம் திகதியிலிருந்து இந்த வகையின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இங்கு வாழ்க்கைத் துணைக்கு அல்லது 22 வயதுக்குக் குறைந்த திருமணமாகாத பிள்ளைகளுக்கு இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கு, 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19, 20 மற்றும் 21 ஆம் பிரிவுகளின் கீழ், இலங்கை பிரஜாவுரிமையை இழந்திருப்பின் அல்லது இலங்கைப் பிராஜவுரிமையை இழக்க அண்மித்திருப்பின் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

       11. விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்தல் வேண்டும் என்பதுடன், அவ்வாறு முறையாகப் பூர்த்தி செய்யப்படாத தகவல் படிவத்தை உடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

குறிப்பு:

  1. விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தும் போது, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் குடியுரிமைப் பிரிவின் பிரதிக் கட்டுப்பாட்டளர் அல்லது உதவிக் கட்டுப்பாட்டாளர் அல்லது இலங்கை வெளிநாட்டுத் தூதரங்களில் கடமையாற்றும் மூன்றாம் நிலை செயலாளர் அல்லது அதிலும் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஆகியோருள் ஒருவரினாலேயே அத்தாட்சிப்படுத்தப்படுதல் வேணடும்.
  2. மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் மூல ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (உதாரணம்: பிறப்புச் சான்றிதழ், விவாகச் சான்றிதழ், பொலிஸ் அறிக்கை போன்ற ஆவணங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்).
  3. சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் அல்லது வெளிநாட்டுத் தூதரகத்திடம் விண்ணப்பதாரியினாலேயே ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
  4. ஆங்கிலம்/ சிங்களம்/ தமிழ் ஆகிய மொழிகளுக்கு மேலதிகமாக வேறொரு மொழியில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் இருப்பின், அந்த ஆவணங்களுடன் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

04. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, விண்ணப்பதாரி குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு நேரடியாக வந்து, குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் நேரடியாக ஒப்படைக்கலாம் அல்லது விண்ணப்பதாரி வெளிநாடொன்றில் வசிப்பதாயின், தாம் பிரஜாவுரிமை பெற்றுள்ள/ நிரந்தர வதிவிட வீசாவைக் கொண்டுள்ள நாட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் ஒப்படைக்கலாம்.

வெளிநாட்டுத் தூதரகங்களில் ஒப்படைக்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களும், அதனுடன் இணைக்கப்படுகின்ற சான்றிதழ்களின் நிழற் பிரதிகளும் (இல. 3 இல் காட்டப்பட்டுள்ள ஆவணங்கள்), வெளிநாட்டுத் தூதரகத்தின் தலைவரினால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட/ தத்துவமளிக்கப்பட்ட தூதரகத்தின் மூன்றாவது செயலாளரினால் அல்லது அவரிலும் சிரேஷ்ட உத்தியோகத்தரொருவரினால் அத்தாட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களும், அதனுடன் இணைக்கப்படுகின்ற சான்றிதழ்களின் நிழற் பிரதிகளும், குடியுரிமைப்/ பிரஜாவுரிமைப் பிரிவின் பிரதிக் கட்டுப்பாட்டாளரினால் அல்லது உதவிக் கட்டுப்பாட்டாளரினால் அத்தாட்சிப்படுத்தப்படும்.

கட்டுப்பாட்டாளர் நாயகம், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்,
பிரஜாவுரிமைப் பிரிவு,
4 ஆம் மாடி,
“சுகுறுபாயா”,
ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
பத்தரமுல்லை.
மின்னஞ்சல் – immigration.gov.lk

05. இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்கள்

  • பிரதான விண்ணப்பதாரி ரூ. 345,000.00
  • வாழ்க்கைத் துணை ரூ. 57,500.00
  • 22 வயதுக்குக் குறைந்த திருமணமாகாத பிள்ளைகள் – ஒரு பிள்ளைக்கு – ரூ. 57,500.00

சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் பரீட்சிக்கப்பட்டு, உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டு உரிய அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னரே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டணங்கள் அறவிடப்படும்.

உரிய கட்டணங்களை செலுத்தப்படுவது தொடர்பில் திணைக்களத்தினால் விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும் என்பதுடன், அவ் உரிய கட்டணத்தை, பத்தரமுல்லை, “சுகுறுபாயா” கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் 04 ஆம் மாடியில் அமைந்துள்ள குடியுரிமைப் பிரிவின் சிறாப்பரிடம் பணமாக (இலங்கை ரூபாவில்) செலுத்துதல் வேண்டும்.

Related Articles

Leave a Reply

Back to top button