![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/22-6243021af0c67-1024x474.jpeg?resize=708%2C328&ssl=1)
இப்போது அதிகமான விபத்துக்கள் தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓடுவதாலேயே ஏற்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மோட்டார் வாகன திருத்துநர் ஒருவர் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை கண்டுபிடித்துள்ளார்.
மோட்டார் வாகன திருத்துநர் பணியில் 30 வருட அனுபவம் கொண்ட கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின்- மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார்.
இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தைப் போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை கழற்றும் போது மோட்டார் வாகனம் நின்றுவிடுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலைக்கவசம் போடாமல் ஏற்படுகின்ற மோட்டார் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காக தான் இதனை ஐந்து வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்ததாகவும் தற்போது இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும் அதனைக் கண்டு பிடித்தவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஏனைய மோட்டார் வாகனங்களுக்கும் இந்த பொறிமுறையை பயன் படுத்தினால் ஓரளவிற்கு மோட்டார் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.