![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/colgmoa-02123322320_11109670_31122021_SSS_CMY.jpg?resize=630%2C420&ssl=1)
இன்று(04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர், பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் பிரதமருடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்போது, வைத்தியர்களின் இடமாற்றல் சபையின் அனுமதியின்றி விசேட வைத்தியர்களுக்கான நியமன பட்டியலைத் தயாரித்தல், வைத்திய இடமாற்றல் சபையின் அனுமதியின்றி தர வைத்தியர்களை இணைத்துக் கொள்ளல், 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்தர இடமாற்ற பட்டியலைத் தயாரிக்காமை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள்குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
இந்த கோரிக்கைளை முன்னிறுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
சுமார் நான்கு நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறி அந்த போராட்டத்தைக் கைவிட்டிருந்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.