இலங்கையில் உக்கிரமடையும் உணவுப்பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை!!
Food shortage

இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி குறித்தும் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 3.4 மில்லியனாக இருமடங்காக அதிகரித்துள்ளமை குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை இன்று மீண்டும் எச்சரித்துள்ளது.
இலங்கையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையில் 1.7 மில்லியன் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக கடந்த ஜூன் மாதம் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் மதிப்பிட்டிருந்தன.
இந்தநிலையில் இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாட்டு அமைப்புக்களால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க 79 மில்லியன் டொலர்களை திரட்டியதாகவும், எனினும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக 70 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான இலங்கையில் கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் 13.1 சதவீதமாக இருந்த வறுமை விகிதம் இந்த ஆண்டு 25.6 சதவீதமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியான இரண்டு பருவகாலங்களின் மோசமான அறுவடை, அந்நிய செலாவணி பற்றாக்குறை போன்ற காரணங்களால், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.