இலங்கைமுக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மக்களுக்கு சீனா தொடர்ந்து உதவும்! – அந்நாட்டுத் தூதுவர் உறுதியளிப்பு

சீன அரசு தொடர்ந்தும் யாழ்ப்பாணம் மக்களுக்கு உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில் மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவி வருகின்றது. அதன் ஓர் அங்கமாகவே சீனத் தூதரகமானது யாழ்ப்பாணம் மக்களுக்கு மீன்பிடி வலை மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கின்றது.

இந்த உதவி வழங்கும் நிகழ்வை ஓர் ஆரம்ப நிகழ்வாகவே நாங்கள் கருதுகின்றோம். இன்று ஆரம்பமான இந்த நிகழ்வானது சீனா மற்றும் வடக்கு மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் என நாங்கள் கருதுகின்றோம்.

குறிப்பாக சீனத் தூதரகமானது இலங்கைக்குப் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது சீனா நாடான இலங்கைக்குப் பெருமளவில் உதவிகளை வழங்கியுள்ளது.

அதேபோல் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதில் சீனா பெரும் பங்காற்றியுள்ளது

அதேபோல் நேற்று (நேற்றுமுன்தினம்) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டத்துக்குமான ஐந்து நீர் சுத்திகரிக்கும் இயந்திரப் பொறிமுறையையும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளோம். அதேபோல் 5 மடிக்கணினிகள் மற்றும் ஒரு தொகுதி புத்தகத்தையும் பொது நூலகத்துக்கு வழங்கியுள்ளோம்.

எனவே, இவை அனைத்தும் ஓர் ஆரம்பமாகவே நாங்கள் கருதுகின்றோம். எதிர்காலத்தில் சீனத் தூதரகம் யாழ்ப்பாணம் மக்களுக்குத் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும்.

உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாக் காலத்தில் இந்தச் சிறிய உதவி வழங்கப்படுவதை ஓர் ஆரம்பப் புள்ளியாகவே நாங்கள் பார்க்கின்றோம். எதிர்காலத்தில் உதவித் திட்டங்கள் வழங்க முடியும்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button