
யாழ்ப்பாணம் பலாலி சந்தையை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலி வடக்கு பிரதேச சபையால் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற கன்னி அமர்வில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்கள் இன்னும் மீளகுடியமர்த்தடாமல் இருக்கிறார்கள், இரண்டாயிரத்து நானூறு ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மக்கள் குடியமர்த்தப் படவில்லை. எமது உறுப்பினர்கள் பலர் இன்னும் சொந்த நிலங்களுக்குத் திரும்பவில்லை. இதனை மேற்கொள்ள அனைவருடைய ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 182 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி மீள்குடியமர்வு அமைச்சினால் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நாம் சபையைப் பொறுப்பேற்ற பின்னர் இதனைத் துரிதப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இராணுவ அதிகாரி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இதன் எழுத்து மூல பிரதிகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கடந்த 2023ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வலி வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை புனர்நிர்மாணிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.