![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/G.L-Peiris.jpg?resize=620%2C446&ssl=1)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்பார்த்த பணிகளை மேற்கொள்ள முடியாது போனது எனக் கூறி, கடந்து சென்ற இரண்டு வருடங்களை மேலதிகமாக அரசு பெற்றுக் கொள்வதற்கு எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மக்கள் அரசுக்குப் பெற்றுக்கொடுத்த காலம் இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன எனவும், குறிப்பிட்ட காலத்தில் சுபீட்சத்தின் நோக்கை நிறைவேற்றுவதற்கு முடிந்தளவு அர்ப்பணிப்புடன் செயற்படுவதே அரசின் இலக்கு எனவும் அவர் கூறினார்.
அஸ்கிரிய மஹாநாயக்க அதிவணக்கத்துக்குரிய வரகாகோட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசுக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமக்கு உள்ளது. மேலதிகமாக மூன்று ஆசனங்களை வைத்துக்கொண்டு சிலர் ஆறு வருடங்கள் ஆட்சியைக் கொண்டு சென்றார்கள். அரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைவரும் அரசு எடுக்கும் முடிவுகள் தொடர்பாக இணைந்து செயற்பட வேண்டும். அதுவே அடிப்படை சித்தாந்தம்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்