இலங்கைசெய்திகள்

ஆவாகுழுவின் தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை கூண்டோடு தூக்கியது எஸ்.ரி.எப்

வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் ஆவா குழுவின் தலைவர் எனக்கூறப்படுபவரின் பிறந்ததினத்தை கொண்டாடிய 16 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆவாகுழுவின் தலைவர், மற்றும், ஆவாகுழுவைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

அவர்கள் ‘ஆவா குழு வவுனியா’ எனப்பெயரிட்ட பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், கூரிய ஆயுதங்களையும் தம்வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட 16 பேரும் ஓமந்தைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்கள், பதாதைகள், கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வவுனியா மருதங்குளம், அரசன்குளம், கோவில்குளம், கோழியாகுளம், சாஸ்திரிகூழாங்குளம், நெளுக்குளம், ஓமந்தை மற்றும் முல்லைத்தீவு, தலைமன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 18 தொடக்கம் 26 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் எனவும், இருவர் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், நால்வர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள், இருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button