தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் – மணிவண்ணன் தரப்பினரும்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/FB_IMG_1663259031917-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
தியாகி திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வு இன்று (15) ஆரம்பமாகியுள்ள நிலையில், அவரின் தியாகத்தை கொச்சைப் படுத்தும் வகையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், முன்னணியில் பிரிந்து சென்ற மணிவண்ணன் தரப்பும் முரண்பட்டுக்கொண்ட கேவலமான செயல் அரங்கேறியுள்ளது.
இரண்டு நாட்களாக இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்து வந்த நிலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினம் ஆரம்பமாகிய முதல் நாளிலேயே இருதரப்புகளுக்கும் இடையிலான அரசியல் காழ்புணர்வு வெளிப்பட்டது.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியை அலங்கரிப்பதிலேயே இருதரப்புகளுக்கும் இடையில் நீயா? நானா? பெரியவன் என்ற போட்டிநிலை தோற்றம் பெற்றது.
அதன் உச்சக்கட்டமாக இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் இரண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாட்டு செய்யப்பட்டு உண்ணாவிரதம் இருந்து தியாகம் செய்து உயிர் நீத்த ஒருவரின் நினைவேந்தல் நிகழ்வை இரண்டு தரப்புகளும் சேர்ந்து கேலிக்கூத்து ஆக்கியுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்வை நெறிப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் வழமையான தனது அரசியில் நாடகத்தை நிகழ்வேந்தல் நிகழ்விலும் அரங்கேற்றினார்.
இதானல் குறித்த நிகழ்வில் முரண்பாடுகள் தோற்றம் பெற்ற நிலையில், உணர்வுபூர்வமாக கலந்து கொண்ட மக்களும் மனவேதனையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை அரசாங்கம் நினைவேந்தல் நிகழ்வை நினைவு கூர்வதற்கு தடங்கல்களை விளைவிக்காத நிலையிலும், தமிழ்தேசியம் பேசி அரசியல் செய்கின்ற கட்சியினராலேயே தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.