செய்திகள்முத்தமிழ் அரங்கம்.

மீண்டும் துளிர்த்துவிட்டேன்!!

poem

கனவொன்று வந்து

என்னை தட்டியெழுப்பியதால்

பழைய நாட்குறிப்பேட்டை புரட்டுகிறேன் 

நான் உன்னால் சிரித்த நாட்களையும்

உனக்காக அழுத நாட்களையும்

ஆதுரமாக மெல்லத்தட்டி 

நினைவூட்டிச் செல்கிறது மையிட்ட எழுத்துக்கள் 

செதில் செதில்களாக எனது அன்பை 

நீ உதிர்த்திப்போன தருணங்களில் 

தந்தி அறுந்த வீணையாக

நான் கதறித் துடித்ததுண்டு 

மாமழை ஒன்றுக்குள் அகப்பட்ட

காகிதக்கப்பலைப்போல 

மீள வழிதெரியாது தவித்த போதும்

செவ்வானத்து நட்சத்திரங்களுக்குள்

உந்தன் முகத்தினை

அன்று தேடிக்கொண்டிருந்தேன் 

ஆனால் நீயோ பூவை நீக்கி

வேரில் வாசம் தேடிச் சென்று கொண்டிருந்தாய் 

சிபி மன்னனைப்போல 

நீதி தவறாதவன் என்று 

உன்னை எண்ணியதையும் 

இயற்கையால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்

என்றெண்ணி மகிழ்ந்திருந்த பொழுதுகளையும்

நினைத்துப் பார்க்கிறேன் 

உனக்குப் பிடித்த பருத்தி ஆடையைக்கூட

இப்போதெல்லாம் தொடுவதில்லை

நீ தந்த துரோக வலிகளிற்கு சமர்ப்பணமாக 

நான் மீண்டும் துளிர்த்துவிட்டேன் என்று

கொண்டல் காற்றிடம்

தூதனுப்பக் காத்திருக்கிறேன்

நீ சென்ற முகவரி கூறாயோ..? 

-பிரபாஅன்பு-

Related Articles

Leave a Reply

Back to top button