இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

செய்தியாளர்கள் மீது கிண்ணியாவில் தாக்குதல்!!

kinniya

இன்று கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பெரும் கொந்தளிப்பான நிலைமை உருவாகியது. நிலைமையை காணொளி எடுத்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டதுடன் பல செய்தியாளர்களின் கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டு அதில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிண்ணியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களே இந்த அடாவடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆத்திரமடைந்த இளைஞர்கள் டயர்களை கொளுத்தி வைத்தியசாலை மற்றும் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டதுடன் அலுவலக கண்ணாடிகளை உடைத்து நாடளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டையும் சேதப்படுத்தினர்.

ஆத்திரமிகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நகரில் கோசமெழுப்பியபடி பேரணியாகச் சென்றனர். அதனைக் காணொளியாக படம் எடுத்தவர்கள் விரட்டிப் பிடித்து தாக்கப்பட்டனர்.

இதன்போது செய்தியாளர்கள் என அடையாளப்படுத்திய பின்னரும் பலரை சூழ்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் கையடக்க தொலைபேசிகள் கமராக்கள் பறிக்கப்பட்டு அதிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்டன.

சிலரது கையடக்க தொலைபேசிகள் அந்த கும்பலால் திருடப்பட்டுள்ளது. அதேவேளை திருகோணமலையை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் நேரலை ஒளிபரப்பிக் கொண்டிருந்த போது தாக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அவரின் இரண்டு கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டு அவற்றிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்ட பின்னர் ஒரு கையடக்க தொலைபேசி திருப்பிக் கொடுக்கப்பட்டதாக குறித்த செய்தியாளர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதேவேளை சம்பவத்தில் பிரதேசசபை தவிசாளரும் தாக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button