இலங்கைசெய்திகள்

அரசு தோல்வி; புதிய தலைவரைத் தெரிவு செய்யுங்கள்! – ஐ.தே.க. கோரிக்கை

“படுதோல்வியடைந்த கோட்டாபய அரசால் இனி ஒன்றுமே செய்ய முடியாது. எனவே, புதிய தலைவரைத் தெரிவு செய்யுங்கள்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று ஒருபுறத்தில் நம் அனைவருக்கும் நன்கு அறிந்த விடயமாக எரிவாயு வெடிப்புச் சம்பவம் உள்ளது. மறுபுறத்தில் உரப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இருந்தும் அரசால் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. எல்லா விடயங்களிலும் பணத்தை வழங்க முடியாது.

அரசு 5 ஆயிரம் ரூபா வழங்கிவிட்டதற்காக நம் நாட்டில் டொலர் பற்றாக்குறை தீரப் போவதும் இல்லை; பால்மா விலை குறையப் போவதும் இல்லை.

மருந்து வாங்க, விவசாயிகளுக்கு உரம் பெற்றுத் தர, குழந்தைகளுக்குப் பால்மா பெற்றுத் தர இங்கு டொலர் இல்லை.

இந்தநிலை தொடருமாயின் புதுவருடத்துக்குள் அரிசியின் விலை அதிகரித்துக் கொண்டே போகும்.

அரசிலுள்ள அமைச்சர்களை மாற்றினால் தீர்வு கிடைக்காது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் தீர்வு கிடைக்கும் என்று சிலர் நினைக்கின்றனர். அவ்வாறு நடக்காது.

எனவே, இந்தச் சூழ்நிலையில் சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்த விடயம்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button