இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை கையெழுத்து வேட்டை!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பிலும் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்கியுள்ளது.

இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகக் கையெழுத்துத் திரட்டப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எ.ஏ. சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இதற்கான நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி இறுதியில் ஆரம்பமாகின்றது.

இந்நிலையில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

எனினும், நடைமுறையில் உள்ள சட்டத்துக்கும், புதிதாக முன்வைக்கப்பட்ட சட்ட திருத்தத்துக்கும் இடையில் பாரிய வித்தியாசம் எதுவும் இல்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி சட்டமூலம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் அல்லது தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்தக் கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button