உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

உலகத் தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறோம்: ஸ்கொட்லாந்து மாநாட்டில் தமிழ் மாணவியின் துணிச்சல் பேச்சு

இன்றைய இளம் தலைமுறையினர் உலக தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் தமிழக மாணவி ஒருவர் உரையாற்றியுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்ற மாநாடு இடம்பெற்றுவருகிறது. கால நிலை மாற்ற மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்தவினிஷா உமா சங்கர் என்ற மாணவியும் கலந்துகொண்டுள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் அழைப்பின் பெயரில் காலநிலை மாற்ற மாநாட்டில் வினிஷா உமாசங்கர் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இதன்போது குறித்த மாணவி உரையாற்றியதாவது, நாம் பேசுவதை நிறுத்திவிட்டு செயல்படத் தொடங்க வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை உலக தலைவர்கள் ஆதரிக்க வேண்டும்.

பழைய விவாதங்களை பற்றி நாம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்துக்கான புதிய பார்வை எங்களுக்கு தேவை. எனவே எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் சார்பாக உங்களை எங்களுடன் சேர அழைக்கிறேன்.

எங்களுடன் துணை நிற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் பழைய சிந்தனை முறைகளையும், பழைய பழக்கங்களையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். எங்களுடன் நீங்கள் சேராமல் இருந்தாலும் நாங்கள் வழி நடத்துவோம். நீங்கள் தாமதித்தாலும் நாங்கள் செயல்படுவோம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டாலும், நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவோம். ஆனால் தயவு செய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நீங்கள் வருத்தப்படமாட்டீர்கள் என்று. வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்ற தவறிய தலைவர்கள் மீது எனது தலைமுறையினரில் பலர் கோபமாகவும், விரக்தியாகவும் உள்ளனர். கோபப்படுவதற்கு எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் கோபப்படுவதற்கு எனக்கு நேரமில்லை. நான் செயல்பட விரும்புகிறேன்.

நான் இந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறுமி மட்டுமல்ல. நான் பூமியில் இருந்து வந்த சிறுமி. நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு மாணவி, கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் தொழில் முனைவோர். மிக முக்கியமாக நான் ஒரு நம்பிக்கையாளர் என்றார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கு எர்த்ஷாட் என்ற பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு சுற்றுச்சூழல் ஆஸ்கர் விருது என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் வினிஷா உமா சங்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button