உலகம்செய்திகள்

மியான்மரில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொலை!

மியான்மரில் இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் எல்லை நகரத்தில் பதற்றம் நிலவுகின்றது.

மணிப்பூர் மாநிலத்தில் மோேர என்ற நகரம், மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம், தென் கிழக்கு ஆசியாவின் வாசல் என அழைக்கப்படுகின்றது.

மியான்மரில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள் நிறைய பேர் இங்கு வசிக்கின்றார்கள். இங்கு தமிழ் கலாசாரம், பண்பாட்டுக்கூறுகளை காண முடியும்.

இங்கு வசித்து வந்தவர்கள் பெருமாள் மகன் மோகன் (வயது 28), முருகா மகன் அய்யனார் (35). இவர்களில் மோகன் ஓட்டோ சாரதி. கடந்த மாதம் 9ஆம் திகதிதான் இவருக்குத் திருமணம் நடந்தது. அய்யனார் சிறிய கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்தநிலையில், நேற்று இவர்கள் இருவரும் மோரேயில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் மியான்மரில் உள்ள தமுவுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு மதியம் 12.30 மணியளவில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களைச் சுட்டுக்கொன்றுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது பற்றி மியான்மர் தமிழ்ச் சங்கத்தினர் கூறியதாவது:-

“சுட்டுக்கொல்லப்பட்டுள்ள இருவரும் எதிர்பாராதவிதமாக மியான்மரில் நுழைந்துள்ளனர். அவர்கள் உளவாளிகள் என நினைத்து இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. ஒவ்வொரு நாளும் இங்கே இராணுவம் கொலைகளை அரங்கேற்றி வருகின்றது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்படி, மியான்மரில் ஆட்சியை இராணுவம் கவிழ்த்த பின்பு, பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் சர்வதேச எல்லை மூடப்பட்டுள்ளது.

ஆனாலும், எல்லைப்பகுதி என்பதால் இரு தரப்பினரும் வியாபாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக எல்லை கடக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கொல்லப்பட்ட மோகன், அய்யனார் உடல்கள் மியான்மிர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. அவர்களது உடல்களைக் கொண்டு வர தூதரக ரீதியில நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கின்றது. இது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன” – என்றனர்.

அய்யனார், மோகன் கொல்லப்பட்ட தகவல், மோரேயில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகின்றது. கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button