இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர் காப்பு பயிற்சி நெறி ஆரம்பம்!!

Survival training

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி நெறியினை வழங்கி வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இலங்கை உயிர் காப்பு சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு பிரிவு என்பன இணைந்து நடாத்தும் உயிர் காப்பு சான்றிதழ் பயிற்சிநெறி ஒன்றினை எதிர்வரும் 15 ஆந்திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கமைவாக பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள இளைஞர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை செவ்வாய்கிழமை (8) காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் வெபர்மைதான உள்ளக நீச்சல் தடாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைசினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இத்திட்டம் நாடுபூராகவும் மாகாண மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கான பயிற்சியாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதனைத்தொடர்து தெரிவு செய்யப்படும் 30 பயிற்சியாளர்களுக்கான 9 நாள் கொண்ட பயிற்சிகள் எதிர்வரும் 15 ஆந்திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தேர்ச்சி பெறுவோர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான உயிர்காப்பு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத்துறையில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் அதிகமாக காணப்படுவதினால் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்து அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொள்பவர்கள் இலகுவாக தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன் கொழும்பு விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் திட்ட உத்தியோகத்தரும் கிழக்கு மாகாண மேற்பார்வையாளருமான கே.எம்.எச். பண்டார இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மாவட்ட செயலக விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button