![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/08/f0efde532ab11ec78928859299d326f31690628806697501_9.jpg?resize=388%2C690&ssl=1)
!இலங்கையில் இதுவரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்பார்டேம்(Aspartame) என்ற இனிப்பானது புற்றுநோயை உண்டாக்கக் கூடிய இரசாயனம் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ரொஷான் குமார இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் அந்த இனிப்புப் பொருளை உணவில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“சில சட்ட நடைமுறைகள் மூலம் இலங்கையின் நுகர்வில் இருந்து நீக்கப்படும் வரை இதுபோன்ற புற்றுநோயை உண்டாக்கும் உணவுகளை பொதுமக்கள் உட்கொள்வதைத் தடுப்பது அவசியம்.
அதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். E951 எனும் பதார்த்தம் கொண்ட இனிப்பு வகை உணவுகள் இப்போது சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன.
அவற்றில், பச்சை நிறத்தில் இருக்கும் பெரும்பாலான இனிப்பு பானங்கள் (டிராஃபிக் லைட் அமைப்பின் படி) அல்லது குறைந்த சர்க்கரை இனிப்புப் பொருட்களில் பெரும்பாலும் இந்த பதார்த்தம் காணப்படுகிறது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான இனிப்பு சாக்லேட் லாலிபாப்கள் மற்றும் வெளிநாட்டு இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களில் இந்த இனிப்பு அதிகமாக காணப்படுகிறது.
எனவே, பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துவது மற்றும் புற்றுநோய் உணவாக உறுதிசெய்யப்பட்ட E951 அஸ்பார்டேம் கொண்ட உணவைத் தவிர்ப்பது அவசியம்.
உணவு பொருட்களில் உள்ள ஸ்டிக்கர்களின் உள்ளடக்கங்களைச் சரிபார்ப்பதன் மூலம் அஸ்பார்டேம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை எந்தவொரு நபரும் அடையாளம் காண முடியும்.
மேலும், சர்க்கரையைப் பயன்படுத்தக் கூடாதவர்கள், இந்த E951 அஸ்பார்டேம் இனிப்பானைத் தங்கள் இனிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இனிப்பானாகப் பயன்படுத்தை தவிர்க்க வேண்டும்.” என பொது சுகாதார பரிசோதகர் ரொஷான் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.