இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியணுக்கு நீதிமன்ற தடையுத்தரவு

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்க்கொள்ளவோ அல்லது போராட்டங்களில் கலந்து கொள்ளவோ கூடாது என்ற நீதிமன்ற தடையுத்தரவு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிஸாரினாலேயே நீதவான் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதீமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டமை குறித்து இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,

“களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் எனக்கு எதிராகவும், என் சார்ந்தவர்களுக்கும் 14 நாட்களுக்கு எந்தவிதமான போராட்டங்களையோ மேற்க்கொள்ளக்கூடாது என நீதிமன்றத்தினால் ஒரு தடை உத்தரவினை வழங்கியுள்ளனர்.

இதுதான் இன்று நாட்டில் உள்ள அராஜகமான நிலமை. ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலே போராடும்போது, இன்று களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்ற தடை உத்தரவினை எடுத்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த நாட்டில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கேள்வி.

அதனை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கின்றார் களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. ஏன் என்றால் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறாத இடங்கள் இல்லை. அவ்வாறு நடக்கும்போது, களவாஞ்சிக்குடியில் மாத்திரம் இவ்வாறு தடை உத்தரவினை பெற்றுக் கொண்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான விடயங்கள் ஊடாக மக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முனையும் போது, மக்கள் இதனையும் விட உத்வேகமாக போராட முனைவார்கள். நான் இன்று வரை போராட்டங்களை செய்ய வேண்டும் என நினைக்கவில்லை.

ஆனால் இந்த தடை உத்தரவு கிடைத்ததற்கு பின்னர் போராட்டம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினை தருகின்றது. கோட்டா கோ ஹோம் என்ற விடயம் நடைபெறும் வரை, அதாவது கோட்டாபய ராஜபக்ச வீடு செல்லும் வரை இந்த போராட்டங்கள் தொடர வேண்டும். அதிலே என்னுடைய பங்களிப்பும் நிச்சம் இருக்கும் என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button